RCB அணியை ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு கையகப்படுத்தியுள்ளது.
RCB அணியை வாங்கியுள்ள பிர்லா குழுமம்
2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற RCB அணி, நடப்பு சாம்பியனாக வரும் மார்ச் 28 ஆம் திகதி, 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், SRH அணியை எதிர்கொள்ள உள்ளது.

2025 சாம்பியன் பட்டம் வென்ற பின்னர், RCB அணியை விற்பனை செய்ய உரிமையாளராக இருந்த லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம் முன்வந்தது.
இந்த அணியை பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு 1.78 பில்லியன் டொலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,723 கோடி) RCB அணியை கையகப்படுத்தியுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், டேவிட் பிளிட்சரின் போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிளாக்ஸ்டோன் இன்வெஸ்ட்மென்ட் ஆகியவை இந்த கூட்டமைப்பில் அடங்கியுள்ளது.
இதன் மூலம், அதிகமான தொகைக்கு விற்கப்படும் ஐபிஎல் அணி என்ற பெருமையை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்க தொழிலதிபரான கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு 1.63 பில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.15,281 கோடி) வாங்கியுள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஆர்யமான் விக்ரம் பிர்லா RCB அணியின் தலைவராகவும், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த சத்யன் கஜ்வானி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்பார்கள்.
ஆர்யமான் விக்ரம் பிர்லா
ஆர்யமான் விக்ரம் பிர்லா, ஆதித்யா பிர்லா குழும தலைவரான குமார மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார்.

28 வயதான இவர், மத்தியப் பிரதேச அணிக்காக 9 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, ஒரு சதம் உட்பட 414 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
2018 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. 2020 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தற்போது ஆதித்யா பிர்லா மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.




