மோசமானவானிலை அமெரிக்காவின் 250வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு பெரும் இடையூறு விளைவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வொஷிங்டன் டி.சி.யில் நேற்று முன்தினம் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் கடும் இடியுடன் மழை பெய்ததால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் திட்டமிடப்பட்டிருந்த நேரத்தில் உரையாற்றக் கிடைக்கவில்லை என்றும் அவரது உரை சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் தாமதமாகியே இடம்பெற்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அத்தகைய தாமதத்திற்கு பின்னர் உரையாற்றிய ட்ரம்ப், நாட்டின் வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் புகழ்பெற்ற தருணங்களில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றியவர்கள் உட்பட பல முன்னாள் படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர் ஈரானின் இராணுவத்தை முற்றிலும் அழித்துவிட்டதாகக் கூறி, அமெரிக்க இராணுவத்தின் திறமைகளை மெச்சிப் பாராட்டினார். இக்கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் 30 நிமிட வானவேடிக்கை நிகழ்ச்சிகள் முன்கூட்டியே நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த கண்கவர் காட்சியை கண்டுகழித்தனர். கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள ஹார்ட்ஃபோர்டிலும், பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஹாரிஸ்பர்க் மற்றும் வில்க்ஸ்-பாரேவிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டங்கள் மோசமான வானிலை காரணமாக இரத்து செய்யப்பட்டன.
பொஸ்டன் நகரில் வானவேடிக்கையைக் காண கூடியிருந்த பார்வையாளர்கள், கடும் வானிலை காரணமாக நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு, சிறிது நேரம் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.




