தெற்கு துறைமுக நகரமான கராச்சியின் பிராந்திய தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் துணை இராணுவப் படையான ரேஞ்சர்ஸ் பிரிவைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவம் நேற்று தெரிவித்தது.
சனிக்கிழமை இரவு கராச்சியில் உள்ள துணை ராணுவப் படையான பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் பிரிவின் மாகாண தலைமையகத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தீவிரவாதி வெடிக்கச் செய்ததால் இந்த உயிரிழப்புக்களும் காயங்களும் ஏற்பட்டன. இச்சம்பவத்தை் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டதாகவும் பொலிஸாரும் நேரில் கண்டவர்களும் தெரிவித்துள்ளனர்.
இம்மோதலின் போது பாதுகாப்புப் படையினர் 03 தீவிரவாதிகளைக் கொன்றதாகவும், காயமடைந்த 04 தீவிரவாதிகளைப் பிடித்ததாகவும் இராணுவம் குறிப்பிட்டது. பிடிபட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர் ஆப்கானிய நாட்டவர் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்றும் இராணுவம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.




