பிரதமர் மற்றும் தொழிற்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று அறிவித்தார். அடுத்த பிரதமரையும் தொழிற்கட்சித் தலைவரையும் தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை ஆரம்பிக்குமாறும் தொழிலாளர் கட்சியை அவர் கேட்டுக்கொண்டார். 2024 இல் நடைபெற்ற பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.
இதையடுத்து தொழிற்கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றார். 2024 ஜூலை 5 ஆம் திகதி பதவியேற்ற கெய்ர் ஸ்டார்மர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரித்தானிய பிரதமராகப் பதவி வகித்தார். பிரித்தானியா அடுத்த பொதுத் தேர்தலை 2029- ஆம் ஆண்டு எதிர்கொள்ளவுள்ளது. இந் நிலையில், கெய்ர் ஸ்டார்மர் தலைமையின் கீழ் மீண்டும் தேர்தலை சந்திப்பது குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ய உள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
லண்டனில் பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த கெய்ர் ஸ்டார்மர், தமது ராஜினாமா முடிவை அறிவித்தார்.அப்போது, தொழிலாளர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
தொழிலாளர் கட்சியின் தேசிய செயற்குழுவிடம், தலைமைப் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 09 ஆம் திகதி தொடங்கி, கோடைக்கால விடுமுறைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற கால அட்டவணையை வகுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். செப்டம்பரில் பாராளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு முன்பே ஒரு புதிய தலைவர் பதவியேற்பார்.அதுவரைக்கும், அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார் என்றும் கூறியுள்ளார்.




