பாகிஸ்தானின் எல்லையிலுள்ள ஆப்கானிஸ்தான் மாகாணங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 26 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 11 சிறுவர்கள் அடங்குவதாகவும் ஆப்கானிய தலிபான்கள் கூறியுள்ளனர்.
இத்தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பாகிஸ்தான் தலிபான்களின் மறைவிடங்களையும் அவர்களது பாதுகாப்பு புகலிடங்களையும் குறிவைத்து, எல்லைப் பகுதியில் எங்கள் இராணுவம் துல்லிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அதன் மூலம் 26 தலிபான்கள் கொல்லப்பட்டதோடு அவர்களது பயிற்சி மையம், வெடிமருந்துக் கிடங்கு என்பன அழிக்கப்பட்டன. அத்தோடு பாகிஸ்தான் தலிபான் தளபதிகளான அலீம் கான் குஷாலி, அக்தர் முஹம்மது ஜானி கேல் ஆகியோருடன் தொடர்புடைய நிலைகள் உள்ளிட்ட நான்கு இலக்குகளும் அழிக்கப்பட்டது.
நம்பகமான உளவுத் தகவல்களின் அடிப்படையில், இத்தாக்குதல்கள் துல்லியமாகவும் திட்டமிடப்பட்ட அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட்டன’ எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் பிரதம பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், குனார், கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களில் 11 சிறுவர்கள், ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் கொல்லப்பட்டதோடு. மேலும் 14 பெண்கள் மற்றும் சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.



