ஆசிய நட்பு நாடுகள் இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பெட்டே ஹெக்சத் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புத் தலைவர்கள், இராணுவ மற்றும் இராஜதந்திரிகளுக்கான ஆசியாவின் முதன்மை மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற இம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் அதிகாரச் சமநிலையைப் பாதுகாக்கவும், வலுவான மற்றும் அதிக தன்னிறைவு கொண்ட நட்பு நாடுகளின் வலையமைப்பு அவசியம். எந்தவொரு மேலாதிக்க சக்தியாலும் பசுபிக் பிராந்தியம் ஆதிக்கம் செலுத்தப்பட்டால், அது பிராந்தியத்தின் அதிகார சமநிலையைச் சீர்குலைத்துவிடும். எந்தவொரு நாடும் தனது மேலாதிக்கத்தைத் திணித்து, நமது தேசத்தினதும் நட்பு நாடுகளினதும் பாதுகாப்பையோ அல்லது செழிப்பையோ கேள்விக்குறியாக்க முடியாது.
அமெரிக்காவின் ஆசிய நட்பு நாடுகள் பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% ஆக அதிகரிக்க வேண்டும். வெறும் ஆடம்பரங்கள் வேண்டாம், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



