இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் வட்டத்தில் தடாலடியாக இணைந்துள்ளார் Groww நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான லலித் கேஷ்ரே.
14.1 பில்லியன் டொலர்
Groww நிறுவனம் பங்குச் சந்தையில் அறிமுகமான நிலையில், அதன் பங்கு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. கடந்த நவம்பர் மாதம் ரூ 100 என அடிப்படை விலையில் Groww-வின் பங்குகள் பட்டியலிடப்பட்டதை அடுத்து, வெறும் நான்கு வர்த்தக அமர்வுகளுக்குள் அதன் விலை 70 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி, சமீபத்திய ஆண்டுகளில் காணப்பட்ட வலுவான பட்டியலில் ஒன்றாக மாறியது.
தற்போது அதன் சந்தை மதிப்பு ரூ 1.18 லட்சம் கோடி அல்லது தோராயமாக 14.1 பில்லியன் டொலர் என அதிகரித்துள்ளது. தற்போது Groww நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ 187.99 என வர்த்தகம் செய்யப்படுகிறது.
Groww நிறுவனமானது கடந்த 2016 முதல் செயல்பட தொடங்கியது. இந்தியாவில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அவர்களின் முதலீட்டை எளிதாக்க வேண்டும் என்பதே Groww நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது.
அதன் பங்கு விலை மின்னல் வேகத்தில் உயர்ந்த பிறகு, தற்போது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது.
மட்டுமின்றி, இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லலித் கேஷ்ரேவின் சொத்து மதிப்பை ரூ 9,000 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியது.
ஃபிளிப்கார்ட்டின் நான்கு முன்னாள் ஊழியர்களான லலித் கேஷ்ரே, ஹர்ஷ் ஜெயின், இஷான் பன்சால் மற்றும் நீரஜ் சிங் ஆகியோர் இந்த தளத்தை பரஸ்பர நிதி முதலீட்டு தளமாகத் தொடங்கினர்.
பின்னர் பங்கு விற்பனை, Futures and Options, அமெரிக்க பங்குகள் மற்றும் பிற தயாரிப்புகளாக வளர்ந்தது. இதனால், முதல் முறை முதலீடு செய்பவர்கள் மட்டுமின்றி, பங்கு வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களும் Groww நிறுவனத்தில் ஈர்க்கப்பட்டனர்.

மத்தியப் பிரதேசத்தின் புறநகர் கிராமமான லெபாவில் பிறந்த லலித் ஒரு சாதாரண விவசாயியின் மகன். கிராமத்தில் வளர்ந்ததால், ஆங்கில வழி கல்வி அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் பெற்றோர் எடுத்த முடிவு, அவருக்கு சாதகமாக அமைந்தது.
யூனிகார்ன் வட்டத்தில்
கல்லூரி காலத்தில் IIT-JEE தேர்வில் வென்று, பாம்பே IIT-ல் வாய்ப்பு பெற்றார். அங்கிருந்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை முடித்த பிறகு, கேஷ்ரே 2013 முதல் 2016 வரையில் ஃப்ளிப்கார்ட்டில் பணியாற்றினார்.
ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வெளியேறிய அதே அண்டில், உடன் பணியாற்றியவர்கள் மூவருடன் இணைந்து Groww நிறுவனத்தை தொடங்கினார். மிக விரைவிலேயே Groww நிறுவனம் உலகின் முன்னணி முதலீட்டாளர்களை ஈர்த்தது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, Groww நிறுவனத்தின் முதல் சாதனையாக 2021 ஆம் ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பை எட்டியதுடன் யூனிகார்ன் வட்டத்தில் இணைந்தது.
2023ல் அதன் சந்தை மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியது. வெறும் 9 வருடங்களில் Groww நிறுவனத்தை மிகப் பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார் லலித் கேஷ்ரே.
Groww நிறுவனத்தில் கேஷ்ரே 55.91 கோடி பங்குகளை சொந்தமாக வைத்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு என்பது தற்போது ரூ 9,448 கோடி என்றே கூறப்படுகிறது.



