பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் 717 மதுபான விற்பனைக் கடைகளை மூடும் முதல்வர் விஜய்யின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
மேலும், பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்துக்குள் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, முதல்வராக விஜய்யின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: “குடிநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை, அப்பழக்கங்களில் இருந்து மீட்பதற்கான இலவச சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை மாவட்டந்தோறும் உருவாக்கிட வேண்டும். மேலும், மூடப்படும் மதுபானக் கடைகளில் 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 3500 பணியாளர்களின் வேலை வாய்ப்பையும், அவர்களது குடும்பங்கள் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.” என்றார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும். அதற்கான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக முழுமையான ஆதரவை வழங்கும். என்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்: “717 மதுபானக் கடைகளை மூடுவதற்கு பதிலாக அனைத்து மதுக் கடைகளையும் மூடி, தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். என்றார்.



