நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சி. ஜோசப் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை வரை இடம்பெற்ற வாக்கு எண்ணிக்கையில் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்தது.
விஜய்யின் வெற்றிக்கு இந்தியப்பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவரது வெற்றி குறித்து வெளிநாடுகளில் போன்றே இலங்கையிலும் தமிழ் ஊடகங்களைப் போன்றே சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் முக்கியத்துவம் வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும். அவரது மனைவி இலங்கையைப் பூர்விகமாகக்கொண்டுள்ளமை முக்கியமாகக் கருதப்படுகிறது. நேற்று மாலைவரை 110- தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்தது. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் பெரும்பான்மையை விஜய் நெருங்கிவிட்டார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
இருப்பினும், இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, கட்சியால் அந்த இலக்கை அடைய முடியாவிட்டால், பெரும்பான்மையைப் பெறுவதற்கு விஜய்க்கு சிறிய கட்சிகளின் ஆதரவை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகள், முடிசூடா மன்னர்களாக மாறக்கூடிய சாத்தியமுள்ள கட்சிகளாகக் கருதப்படுகின்றன. தொங்கு சட்டமன்றச் சூழலில், இக்கட்சிகளின் ஆதரவு ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும்.
பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால், இறுதி முடிவு நிச்சயமற்றதாகவே உள்ளது. ஆனால் நேற்று மாலை நிலவரப்படி, தெளிவான பெரும்பான்மையுடனோ அல்லது தேர்தலுக்குப் பிந்தைய ஆதரவுடனோ அடுத்த அரசாங்கத்தை வழிநடத்தும் பாதையில் விஜய் உறுதியாக இருக்கிறார்.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார். வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருந்த சூழலில் விஜய் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். விருகம்பாக்கம் மற்றும் பெரம்பூரில் மக்கள் மத்தியில் தவெகவுக்கு சாதகமான மனநிலை அதிகப்படியாக இருந்ததால் அந்தத் தொகுதியில் ஏதாவது ஒன்றில் விஜய் போட்டியிட முடிவானது. முதலில் பெரம்பூரில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் மனநிலையிலேயே இருந்தார். ஆனால் கட்சி கட்டமைப்பு வலுவாக இருக்கும் தொகுதி என்பதாலும் வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதி என்பதால் விஜய்யே இந்தத் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார். விஜய் ஜெயிக்க முக்கிய காரணம் கட்சியின் கட்டமைப்பே. தொகுதியில் கணிசமாக உள்ள தலித்துகள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்கும் விஜய்க்கு சாதகமாக மாறியிருக்கிறது.
விஜய் மீதான ஈர்ப்புக்கும் நட்சத்திரத்தன்மைக்கும் ஈடாக ஒரு வலுவான போட்டியாளரை இருபெரும் கட்சிகளுமே நிறுத்தாததும் பெரம்பூர் தொகுதியை எளிதில் விஜய் வெல்ல காரணமாக அமைந்தது.
மாநிலம் முழுவதும் விஜய்-க்கு ஆதரவான அமைதியான ஒரு அலை வீசி இருப்பது இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் உற்றுநோக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான சென்னை மாவட்டத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்த 2026 தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான களமாக மாறியுள்ளது.
தமிழகத்தில் 1967-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை தொடர்ந்து 59 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்து வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கமும் முடிவுக்கு வந்துள்ளது.
இதேவேளை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினே தோல்வியை சந்தித்துள்ள நிலையில், த.வெ.க. முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



