தனது ஊழியர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தடை விதித்துள்ளார்,
தனது பாதுகாப்பு தொடர்பில் அச்சம் அதிகரித்து வரும் நிலையில் அவர் இந்தத் தடையை விதித்திருப்பதாக ஐரோப்பிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அவரது ஊழியர்களின் இல்லங்களில் கண்காணிப்பு கட்டமைப்புகள் நிறுவப்பட்டிருப்பதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சிக்கவிழ்ப்பு அல்லது படுகொலை முயற்சி குறித்த அச்சங்கள் தீவிரமடைந்ததன் காரணமாக, ரஷ்ய ஜனாதிபதிக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு நடவடிக்கைகள் சமீபத்திய மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்திருக்கிறது.
கிரெம்ளினுக்கு வரும் எந்தவொரு பார்வையாளரும் இரண்டு சுற்று சோதனைகளுக்கு உட்படுத்தப்படவும், அதேநேரம் புட்டினின் அருகாமையில் பணிபுரியும் ஊழியர்கள் கையடக்கத் தொலைபேசிகள் அல்லது இணைய வசதி கொண்ட எந்தவொரு சாதனத்தையும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.உயர்மட்ட அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவையால் ஏற்பாடு செய்யப்படும் போக்குவரத்து வசதிகளை மட்டுமே அவர்கள் பிரத்தியேகமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் சமையல்காரர்கள், மெய்க்காப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் வீடுகளிலும் கண்காணிப்பு கட்டமைப்புகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



