பங்காளதேசம் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடியை சீர்செய்ய உதவும் திட்டத்தின் கீழ் மேலதிகமாக 5,000 தொன் டீசலை வழங்க இந்தியா நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்தியா-பங்காளதேச நட்புறவுக் குழாய் வழியாக இந்த 5,000 தொன் டீசலும் பர்பதிபூர் பத்மா எண்ணெய் களஞ்சியத்திற்கு கிடைக்கப்பெறுவதாக பர்பதிபூர் பத்மா எண்ணெய் களஞ்சிய முகாமையாளர் முகமது அஹ்சன் ஹபீப் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய அமைச்சு அதிகாரிகளது தகவல்களின் படி, கடந்த மார்ச் மாதத்தில் 22,000 தொன் டிசல் விநியோகிக்கப்பட்டதோடு, ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரை இந்தியாவின் நுமாலிகரில் இருந்து 8,000 தொன் டீசலை பங்களாதேசம் பர்பதிபூர் களஞ்சியத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மேலும் டீசல் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதோடு, அடுத்துவரும் இரண்டொரு நாட்களுக்குள் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேலும் 7,000 தொன் டீசல் வரவிருப்பதாகவும் களஞ்சியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவிலிருந்து பங்காளதேசம் சுமார் 25,000 தொன் டீசலைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.



