ரூ. 430 மில்லியன் செலவில் புதிய திட்டம்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலான நவீன தாழ்தளப் (Low-floor) பஸ் சேவை, எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இந்தச் சேவை உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்படவுள்ளது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளையும் மனித கண்ணியத்தையும் உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைய, ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) முன்முயற்சியின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதற்காக 430.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 10 நவீன குளிரூட்டப்பட்ட தாழ்தளப் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்த பேருந்தின் முக்கிய அம்சங்களாக,சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் மற்றும் ஏனைய மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி ஏறி இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். இதில் 33 ஆசனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நவீன பாதுகாப்பு வசதிகள் இப்பஸ்களில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த பஸ்கள் மாக்கும்புரவிலிருந்து புறக்கோட்டை , மாக்கும்புரவிலிருந்து – கடவத்தை ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படும்.
காலை மற்றும் மாலை நேர நெரிசல் நேரங்களில் (Peak Hours) ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்தச் சேவை இடம்பெறும்.
பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் மஹரகம அபேக்ஷா (Apeksha) புற்றுநோய் மருத்துவமனை போன்ற முக்கிய சிகிச்சை மையங்களை உள்ளடக்கியதாக இந்த வழித்தடங்கள் அமையவுள்ளன.



