முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாரச்சி கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து இரண்டு T-56 ரக தோட்டாக்களுக்கான மெகசின்கள், 221 தோட்டாக்கள், ஒரு கைக்குண்டு, 7.2 வகை தோட்டாக்கள் 31, 0.2 வகை தோட்டாக்கள் 103 ஆகியன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கைக்குண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
முன்னாள் பாரதளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாரச்சி ஆயுதங்கள் வைத்திருப்பதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவானது, கெஸ்பேவ நீதவானுக்கு தெரிவித்ததை அடுத்து நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில், பிலியந்தலவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (16) காலை சோதனை நடத்தப்பட்டபோது இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிலியந்தல, மாம்பேவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொலிஸார் சோதனை நடத்தியதாகவும், சட்டவிரோதமாக கைவசம் இருந்த ஆயுதங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சந்தன கத்ரியாரச்சியின் இல்லத்தில் மேலும் சோதனைகளை நடத்தியதில், பதிவு செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரண்டு ஷொட்-கன்களும் இரண்டு 9 மி.மீ. துப்பாக்கிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிகளில் ஒன்று சந்தனா கத்ரியாரச்சியின் பெயரிலும், ஏனைய 3 துப்பாக்கிகளும் சந்தனா கத்ரியாரச்சியின் மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அதற்கமைய, சந்தன கத்ரியாரச்சி இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய, கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் தனியான விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரான நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
விஜய குமாரதுங்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை மக்கள் கட்சியின் மூலம் அரசியலில் நுழைந்த சந்தன கத்ரியாரச்சி, பின்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கெஸ்பேவ தேர்தல் அமைப்பாளராகவும் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




