அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மார்ட்டின் கோமா நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டேமியன் மார்ட்டின்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 1992 ஆம் ஆண்டு முதல் 2006 வரை விளையாடியவர் துடுப்பாட்டக்காரர் டேமியன் மார்ட்டின்.

இந்த காலத்தில், அவுஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 13 சதம் உட்பட 4,406 ஓட்டங்களும், 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதம் உட்பட 5,346 ஓட்டங்களும் குவித்துள்ளார்.

1999 மற்றும் 2003 உலக கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய அணியில் மார்ட்டின் இடம் பெற்றிருந்தார்.
மேலும், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட மார்ட்டின், அந்த தொடர் மூலம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக முதன்முறையாக, இந்தியாவில் இந்திய அணியினை அவுஸ்திரேலியா அணி தோற்கடித்தது.
தற்போது 54 வயதான மார்ட்டின், ஆஷஸ் தொடரின் 4வது போட்டியில், தனது உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இருந்தார்.
மூளை காய்ச்சலால் கோமா
இதனையடுத்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், குயின்ஸிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுளளது. மேலும், தற்போது அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ட்டின் குடும்பத்தின் சார்பாக, அவர் மருத்துவமனையில் இருப்பதை உறுதிப்படுத்திய முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், “அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது, நிறைய பேர் பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் அனுப்புவதை அவரது குடும்பத்தினர் அறிவார்கள்” என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் டேரன் லெஹ்மன், “டேமியன்மார்ட்டினுக்கு நிறைய அன்பும் பிரார்த்தனைகளும். வலிமையாகவும் போராடும் ஜாம்பவானாகவும் இருங்கள். குடும்பத்திற்கு அன்பு செலுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.




