ஜப்பானில் நேற்று பாரியளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன், மின்சார சேவைகளும் செயலிழந்தன. இந்நில நடுக்கம் 7.1 ரிக்டரில் பதிவாகியுள்ளது. உயிர்ச் சேதங்கள் ஏற்படாதிருந்தபோதிலும், 50 பேர் படு காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் தெற்குத் தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இத்தீவில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்கள், மாகாணத்தின் தலைநகருக்கு அருகிலுள்ள உகி நகரின் தெற்கே ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த மாகாணத்தில் 3.3 முதல் 4.5 ரிக்டர் வரையிலான 26 கூடுதல் பின் அதிர்வுகள் ஏற்பட்டன. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சுமார் 50,000 வீடுகளில் மின்சாரம் செயலிழந்தது.இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜப்பானிய பிரதமர் சனே டகாயிச்சி, இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்களின் விபரங்கள் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மின்வெட்டும் தீயும் ஏற்பட்டுள்ளன.வீதிகளும், பாலங்களும் சேதமடைந்துள்ளதோடு கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.




