பாகிஸ்தானின் கராச்சி நகரின் காற்றின் தரக் குறியீடு அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாகவும், இது பொது சுகாதாரத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் கராச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் கராச்சி காற்றின் தரச்சுட்டி, உலக சுகாதார ஸ்தாபனத்தின் வரம்புகளை பெரிதும் மீறி, அபாயகர நிலையை எட்டியுள்ளது. இது கடுமையான பொது சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் கட்டத்தை அடைந்துள்ளது என்று சுற்றுச்சூழல் கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் ஃபர்ரக் நவாஸ் கூறினார்.
சுற்றுச்சூழல் கற்கைகளுக்கான நிலையத்தினால் கராச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில், சமீபத்திய ஆண்டுகளில் இந்த மாநகரம் சந்தித்து வரும் விரைவான சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து கடும் கவலை தெரிவிக்கப்பட்டதோடு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வீட்டுவசதித் திட்டங்களுக்காக மரங்களை நகரம் தொடர்ந்து இழந்து வருவது தொடர்பில் அதிகாரிகள் மௌனம் காப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.
பணிப்பாளர் டொக்டர் ஃபர்ரக் நவாஸ் மேலும் குறிப்பிடுகையில், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் இருக்கும் நிலையில் சுற்றுச்சூழல் மாசடைதல் மற்றும் வேகமாக மாறிவரும் காலநிலை ஆகியன தேசிய சவால்களாக விளங்குகின்றன. மனித உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சமாளிக்க அவசர நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். டவுன் நியூஸ்




