தங்கள் ஆற்றல் மூலம் பணம் சம்பாதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் குழந்தை நட்சத்திரங்களாகத் திகழ்பவர்களுக்குத் தடை விதிக்க டச்சு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இணையத்தில் தங்கள் பிள்ளைகளை பயன்படுத்திப் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் பெற்றோர் மீது அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தொழில்வாய்ப்பு அமைச்சர் தியரி ஆர்ட்சன் தெரிவித்துள்ளார். குடும்ப சாகசங்கள், பொம்மைகளைப் பிரித்துக் காட்டுதல் மற்றும் கணினி விளையாட்டுகள் போன்ற காணொளிகள் மூலம், அனுசரணை, விளம்பரம் என்பவற்றின் ஊடாகக் சிறுவர்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் பெருமளவில் பணம் சம்பாதித்து வருகின்றனர். இதுபோன்ற வர்த்தக செயற்பாடுகளுக்கு பிள்ளைகளைப் பயன்படுத்தப்படுவது, நடைமுறையில் குழந்தைத் தொழிலாளர் முறைமைக்குச் சமம் என்றும், அவர்களை அவ்வாறே கருத வேண்டும் என்றும் அமைச்சர்கள் டச்சு பாராளுமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். அமைச்சர் தியரி ஆர்ட்சன் மேலும் குறிப்பிடுகையில், சிறுவர்களில் செல்வாக்கு செலுத்தும் கலைஞர்கள் சிறுவர் தொழிலாளர் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இதன் ஊடாக 16 வயதுக்குட்பட்டவர்கள் இணையத்தில் வர்த்தக செயற்பாடுகளை உருவாக்குவதை சட்டவிரோதமாக்க முடியும் என்றும் கூறினார்.
நிறுவனங்கள் அல்லது பெற்றோர்களால் வருவாய்க்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டால், அவர்கள் தங்களது தனித்துவத்தை இழப்பர் அல்லது தங்களைப் பற்றிய எதிர்மறையான பிம்பத்தை வளர்த்துக் கொள்ளும் அபாயத்திற்கு உள்ளாவர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



