NEMIS கட்டமைப்பு ,‘ஈ-தக்சலாவ’ கற்றல் மேலாண்மை முன்னோடித் திட்டம் ஆரம்பம்

3 Min Read

தகவல்கள், சேவைகள் மற்றும் வாய்ப்புகளை அணுகும் பாரம்பரிய முறையை முற்றாக மாற்றி, தொழில்நுட்பத்தின் மகிமையை இந்நாட்டு மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக்கும் “டிஜிட்டல் ஸ்ரீ லங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு சிறப்பான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய கல்வி மேலாண்மை தகவல் கட்டமைப்பின் மனிதவளப் பிரிவின் முதற்கட்டம் (NEMIS HRM – Phase 1) மற்றும் ‘ஈ-தக்சலாவ’ கற்றல் மேலாண்மைக் கட்டமைப்பின் (LMS) முன்னோடித் திட்டம் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் மகாநாடு 2026 ஜூன் மாதம் 06 ஆம் திகதி அலரிமாளிகையில் மிக விமர்சையாக நடைபெற்றது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழினுட்பக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உட்பட முக்கிய அதிகாரிகளும் விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

”பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பொறுப்புக்கூறும் அரசாங்கம் என்ற ரீதியில், ஒவ்வொரு பிள்ளையும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய ஒரு ஜனநாயகக் கல்வி முறையை நாட்டில் உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அதற்காக சரியான தரவுகள், கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பக் காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், தற்போதைய அரசாங்கத்திற்கு டிஜிட்டல்மயமாக்கல் என்பது மிகவும் முக்கியமான ஒரு காரணியாகும் என்றும், மாறிவரும் உலகத்துடன் நாமும் மாறி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் சேவைகளை மிகவும் திறமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களுக்கு வழங்குவதற்கு டிஜிட்டல்மயமாக்கல் ஒரு இன்றியமையாத கருவியாகும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சபையில் உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன,
”டிஜிட்டல்மயமாக்கல் என்பது வெறும் தரவுப் பரிமாற்றமோ அல்லது தொழில்நுட்ப வளர்ச்சியோ மட்டுமல்லாமல், முழு தேசத்தினதும் மனிதநேய மாற்றமும் சமூக வலுவூட்டலின் மிக சக்திவாய்ந்த கருவியும் ஆகும்” எனக் குறிப்பிட்டார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் ஆட்சிமுறை போன்ற முக்கிய துறைகளுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு இடையே இதுவரை காணப்பட்ட சமூக இடைவெளியைக் குறைத்து சமூக நீதியை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார். மின்னணு ஆட்சிமுறை (E-Governance), டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் மொபைல் இணைப்பு ஆகியவற்றின் மூலம் இளைய தலைமுறையினர், பெண்கள் மற்றும் விளிம்புநிலை குழுக்களுக்குப் பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் தீவிரப் பங்காளிகளாக மாறுவதற்குப் புதிய கதவுகள் திறக்கப்படும் என்றும், 2030 ஆம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய இலக்கை நோக்கி பயணிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் மிகச் சிறப்பான தருணத்தைக் குறிக்கும் வகையில் பிரதமரால் NEMIS HRM – Phase 1 கட்டமைப்பு மற்றும் LMS முன்னோடித் திட்டம் என்பன உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, இக்கட்டமைப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஸ்ரீலங்கா விமானப்படையின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) அதிகாரிகளுக்கும் மற்றும் மாகாண கல்வி அபிவிருத்திக் குழுவினருக்கும் பாராட்டு விருதுகளும் இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிழ்வில் ‘கல்விக்கான டிஜிட்டல் உருமாற்ற வீதி வரைபடம்’ (Digital Transformation Road Map for Education) குறித்த கூட்டு விவரிப்பை பிரதமரின் மேலதிக செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரப் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் உதாரா திக்கும்புர ஆகியோர் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தேசிய கல்வி மேலாண்மை தகவல் கட்டமைப்பு (NEMIS) பற்றிய அறிமுகத்தை சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி அர்ஜுன ரத்நாயக்க மற்றும் பணிப்பாளர் தக்ஷிணா கஸ்தூரியாரச்சி ஆகியோரும், கற்றல் மேலாண்மைக் கட்டமைப்பு (LMS) பற்றிய அறிமுகத்தை பிரதி கல்விப் பணிப்பாளர் சுமுது விஜேசுரிய மற்றும் தென் மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர் பிரபானி குலதுங்க ஆகியோரும் வழங்கினர்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு உட்பட அரசாங்கத்தின் அனைத்துத் தரப்பினரும் இணைந்து, தடைகளைத் தாண்டி முழு நாட்டையும் ஒரே வலையமைப்பிற்குள் கொண்டு வரும் டிஜிட்டல் தேசியப் பணியை மேலும் வலுவாக முன்னோக்கி எடுத்துச் செல்வார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *