ராஜஸ்தானின் பிகானேர் பகுதியை நேற்று முன்தினம் பிற்பகலில் ஒரு மிகப்பெரிய புழுதிப் புயல் தாக்கியது.
இதனால், பகல் நேரம் இருள் போல காட்சியளித்தது. மிகப்பெரிய மஞ்சள் புழுதிப் புயல் நகரத்தை நோக்கி வந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்த புழுதிப் புயல் காரணமாக பிகானேரின் முக்கிய வீதிகளில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவுக்கு காட்சித் திறன் கடுமையாக பாதித்தது. மஞ்சள் நிற புழுதிப் புயல் மற்றும் ஒரு விசித்திரமான சத்தம் காரணமாக, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் அவசர அவசரமாக தஞ்சம் புகுந்தனர். மேலும், பலத்த சத்தத்துடன் வந்த புழுதி நிறைந்த காற்று தீவிரமடைந்ததால் பல பகுதிகளில் மக்களிடம் பீதி ஏற்பட்டது. கடைக்காரர்கள் அவசரமாகக் கடைகளை மூடியதாலும், மக்கள் புயலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முண்டியடித்து ஓடியதாலும், பெரும் குழப்பம் ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்ததால், பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.
வடஇந்திய மாநிலங்களில் கோடை காலத்தில் நிலங்கள் வறண்டு விடுகின்றன. இதனால் மண் பொடியாக மாறி காற்றில் கலக்கிறது. அதிக வெப்பத்தால் வலுவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. மேலும் பாகிஸ்தான் மற்றும் தார் பாலைவனத்தில் இருந்து வீசும் வெப்பக் காற்று மணல், தூசியை வாரி இறைக்கிறது.
இதுபோன்ற காரணங்களால் வடஇந்திய மாநிலங்களில் மே, ஜூன் கோடை காலத்தில் புழுதிப் புயல்கள் உருவாகின்றன.



