உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பாரிய வான்வழித் தாக்குதல்களை நேற்று முன்னெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் வரக்கூடும் என அமெரிக்க, உக்ரைனிய அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த சில தினங்களாக உக்ரைன் முன்னெடுத்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உக்ரைனியத் தலைநகரில் குடியிருப்பு கட்டடங்கள், மாணவர் விடுதி, கார் சேவை மையம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.
இதேவேளை, கீவ்வின் இராணுவ நிர்வாகியான டைமூர் தகாசென்கோ, டெலிகிராமில் வெளியிட்ட ஒரு பதிவில், தலைநகரம் பெரும் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும், அனைவரும் தங்குமிடங்களில் இருக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



