அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீடித்த, நிலையான வர்த்தக ஒப்பந்தத்தை நாம் எட்டுவோம் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியா நேற்றுத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்கச் செயலாளர் ரூபியோ நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இணைந்து நேற்று கூட்டு செய்தியாளர் மாநாடொன்றையும் நடத்தினார். அச்சமயமே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லவென அமெரிக்க வர்த்தகக் குழு மிக விரைவில் இந்தியாவுக்கு வருகை தரும் என்றுள்ளார்.
இதேவேளை இந்தியப் பிரதமருடன் நடத்திய சந்திப்பில், உலகளாவிய எரிசக்திச் சந்தையை பணயக்கைதியாக வைத்திருக்க ஈரானுக்கு அமெரிக்கா அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.
இச்சமயம் மோடி அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுத்தார் என இந்திய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



