இணையத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற கட்சி கடந்த சில நாட்களாக பரவலாக பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையில்லாத இளைஞர் மற்றும் கரப்பான் பூச்சி குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

அதன் பின்னர் தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என நீதிபதி சூர்யகாந்த் விளக்கமளித்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(Cockroach Janata Party) என்ற இயக்கத்தை அபிஜித் தீப்கே என்பவர் மே 16 ஆம் திகதி தொடங்கினார்.

இதன் இணையதளத்தில், மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சோம்பேறி ஆகியவை கட்சியின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, கட்சித்தாவும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜ்யசபா எம்பி ஆக தடை ஆகியவை வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன.
இதில் உறுப்பினராக தலைமை நீதிபதி கூறியது போல் சோம்பேறியாக இருக்க வேண்டும், வேலை இல்லாதவராக இருக்க வேண்டும், எப்போதும் ஆன்லைனிலேயே நேரத்தை செலவிடுபவராக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளார்.
பெருகும் ஆதரவு
கட்சி தொடங்கப்பட்ட 4 நாட்களிலே 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினராக தங்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும், கட்சியின் எக்ஸ் பக்கத்தை சுமார் 2 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், இன்று அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இதே போல், இன்ஸ்டாகிராம் பக்கத்தை 13 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜகவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே 8.8 மில்லியன் பேர் மட்டுமே பின்தொடர்கின்றனர்.
இந்த கட்சியை தொடங்கிய அபிஜித் தீப்கே மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆவார். முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்புத் குழுவில் பணியாற்றியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு படித்துள்ள நிலையில், விரைவில் இந்தியா வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இது முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சியாக மாறுமா அல்லது டிஜிட்டல் புரட்சியாக இருக்குமா என்பது தெரியவில்லை.



