தாய்லாந்தில் வருடாந்தம் நடத்தப்படும் ‘சர்வதேச தாய் சண்டைக் கலைப் போட்டி’ முதல் முறையாக இலங்கையில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. நீர்கொழும்பு கோல்ட் சேன்ட்ஸ் ஹோட்டல் வளாகத்தில் எதிர்வரும் மே 28 தொடக்கம் ஜூன் 01 ஆம் திகதி வரை இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டி ஆரம்ப வைபவம் மே 31 ஆம் திகதி மாலை 5.30 இற்கு நீர்கொழும்பில் கோலாகலமாக நடத்த ஏற்பாடாகியுள்ளது.
உலக முய்தாய் அமைப்பு, உலக முய்தாய் போரான் சம்மேளனம் மற்றும் ஐக்கிய பொக்சின் சம்மேளனம் போன்ற சண்டைக் கலை கட்டுப்பாட்டுச் சபைகளின் மேற்பார்வையின் கீழ் இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது. தாய்லாந்து மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வருகைதரும் சர்வதேச நிபுணர் குழுவினரால் போட்டிகள் நிர்வகிக்கப்படும்.
இந்தப் போட்டிக்கான இலங்கையின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ‘who முய்தாய் லங்கா’ நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்நாட்டில் தாய் சண்டைக் கலையின் முன்னேற்றத்திற்காக இந்த நிறுவனம் செயற்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கு 15இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 120 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர்கள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் உதவியாளர்கள் உட்பட 350 இற்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிக்கு சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ள இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணிகம் ஒப்புதலை வழங்கியுள்ளது.



