மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து மூன்று தோல்விகளுக்கு பின்னர் லக்னோ சுப்பர் ஜயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆறு விக்கெட்டுகளால் வெற்றியிட்டியது.
மும்பை, வான்கடே அரங்கில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற இந்தப் போட்டி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையிலான ஆட்டமாக அமைந்தது. இதில் கடைசி (10ஆவது) இடத்தில் இருக்கும் ரிஷப் பண்டின் லக்னோ அணி தொடர்ச்சியாக சந்திக்கும் ஆறாவது தோல்வியாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட லக்னோ அணிக்கு நிகலஸ் பூரன் 21 பந்துகளில் ஒரு பௌண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 63 ஓட்டங்களை விளாசினார்.
இந்த அதிரடி ஆட்டத்துடன் லக்னோ அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை விளாசியது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு மீண்டும் ஒருமுறை விக்கெட் வீழ்த்த முடியாமல்போனது. அவர் இம்முறை ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் இதுவரை 3 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளார்.
எனினும் பதிலெடுத்தாட வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர்களான ரியான் ரிக்கல்டன் 32 பந்துகளில் 83 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 44 பந்துகளில் 84 ஓட்டங்களையும் விளாசினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 143 ஓட்டங்களை பெற்ற நிலையில் மும்பையின் வெற்றி இலகுவானது.
அந்த அணி 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 229 ஓட்டங்களை எட்டியது.



