பாகிஸ்தானின் சில நகரங்க ளில் வசிக்கும் இளம் பிள்ளைகளின் இரத்தத்தில் ஈயத்தின் அளவு கவலைக்கிடமான அளவில் அதிகரித்து காணப்படுவது தெரிய வந்துள்ளது. தேசிய சுகாதார சேவைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஹரிபூர், இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், பெஷாவர், குவெட்டா, ராவல்பிண்டி உள்ளிட்ட ஏழு நகரங்களில் உள்ள கைத்தொழில்துறைப் பகுதிகளில் வசிக்கும் 2,100 இற்கும் மேற்பட்ட 12 முதல் 36 மாதங்களுககு உட்பட்ட சிறுவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. அதாவது 10 பிள்ளைகளுக்கு 4 பேரின் இரத்தத்தில் அபாயகரமான அளவில் ஈயம் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது. பிள்ளைகளின் இரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகரித்து காணப்படுவதால் அவர்களது வளர்ச்சி தடுக்கப்படலாம், இரத்தச் சோகை ஏற்படலாம், நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்தலாம், நுண்ணறிவு திறன் வீழ்ச்சியடைந்து, கவனச் சிதறல் ஏற்படலாம், நினைவாற்றலைப் பாதிப்பதன் மூலம் அறிவாற்றல் வளர்ச்சியை கடுமையாகச் சேதப்படுத்தலாம், இது கற்றல் குறைபாடுகள் மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சினைகளையும் அதிகரிக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கவென பல்துறை நடவடிக்கைகளை முன்னெடுக்க உறுதிபூண்டிருப்பதாக பாகிஸ்தான் யுனிசெப் பிரதிநிதி பெர்னிலே அயர்ன்சைட் கூறியுள்ளார்.



