இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் தேசிய சுப்பர் லீக் 4 நாள் தொடரில் முதலில் துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா தலைமையிலான தம்புள்ளை அணி முதல் இன்னிங்ஸுக்கு 222 ஓட்டங்களை பெற்றுள்ளது.
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (04) ஆரம்பமான இறுதிப் போட்டியில் தம்புள்ளையுடன் சரித் அசலங்க தலைமையிலான கண்டி அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தம்புள்ளை அணி சார்பில் மத்திய வரிசையில் வந்த சொனால் தினூஷ (51) மாத்திரமே அரைச் சதம் ஒன்றை பெற்றார். ஆரம்ப வீரர்களான நிஷான் மதுஷான் 9 ஓட்டங்களுடன் வெளியேற மத்திய வரிசையிலும் ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் 15 ஓட்டங்களையே பெற்றார். குறிப்பாக கொழும்பு அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு தனஞ்சய லக்ஷான் மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் தம்புள்ளை அணி 70 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
முதல் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி ஆட்டநேர முடிவின்போது 5.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஆரம்ப வீரர்களான ரவிந்து பத்திரண ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்ததோடு மறுமுனையில் தனங்சய லக்ஷான் ஓட்டம் பெறும் முன்னரே ரன் அவுட் ஆனார்.
பிரபாத் ஜயசூரிய 9 ஓட்டங்களுடனும் நுவனிந்து பெர்னாண்டோ 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.



