இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் பிரதான கழகங்களுக்கு இடையிலான டி20 தொடர் எதிர்வரும் மே 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் மொத்தம் 14 பிரதான கழகங்கள் பங்கேற்கவுள்ளன.
இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கும் போட்டி அட்டவணையின்படி 14 கழகங்களும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆரம்ப சுற்றில் ஆடவுள்ளன. இதில் ஏ குழுவில் சிசிசி, முவர்ஸ், பிஆர்சி, தமிழ் யூனியன், நுகேகொடை எஸ் அன்ட் டபிள்யூ.சி, குருநாகல் யூத், பதுரலிய விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதன் பி குழுவில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்துடன் என்சிசி, கோல்ட்ஸ், புளூம்பீல்ட், ஏஸ் கெப்பிடல், பொலிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் எஸ்எஸ்சி அணிகள் இடம்பெற்றுள்ளன. ஆரம்ப சுற்றில் குழுநிலையில் ஓர் அணி மற்ற அணியுடன் ஒருமுறை மோதும் இரண்டு குழுக்களிலும் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறவுள்ளன.
இதன்படி இந்தத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் மே 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள் மே 29 ஆம் திகதியும் இறுதிப் போட்டி மே 31 ஆம் திகதி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இதில் கடந்த முறை தொடரின் இறுதிப் போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்தை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய சிசிசி அணி நடப்புச் சம்பினாகவே இம்முறை களமிறங்குகிறது.



