இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் திருமணம் செய்துகொள்ளாமலே கர்ப்பமான ஒரு இளம்பெண், தான் பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்து கழிவறையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண்
கர்நாடகா மாநிலத்திலுள்ள Devanahalli என்னுமிடத்தில் அமைந்துள்ள Foxconn தொழிற்சாலையில் வேலை செய்துவந்துள்ளார் ரேணுகா (19) என்னும் இளம்பெண்.

நேற்று முன்தினம் கழிவறைக்குச் சென்ற ரேணுகாவுக்கு திடீரென குறைபிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.
அந்த ஏழு மாதக் குழந்தை திடீரென பிறந்ததால் அதிர்ச்சியடைந்த ரேணுகா, குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்று, பிளாஸ்டிக் கவர் ஒன்றிற்குள் குழந்தையின் உடலைப் போட்டு, கழிவறைக்குள் வீசியுள்ளார்.
பிறகு மற்றொரு பெண் கழிவறைக்குச் செல்லும்போது கழிவறைக்குள் குழந்தையின் உடல் கிடப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து மேலதிகாரிகளுக்கு தகவலளிக்க, பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.
திருமணம் ஆகாமலே கர்ப்பமுற்றதால், வெளியே தெரிந்தால் அவமானம் எனக் கருதி அந்தப் பெண், குழந்தையை கொலை செய்ததாக கருதப்படுகிறது.
ரேணுகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கர்ப்பமுற்றதை அவர் மறைத்து வைத்திருந்தாரா, அவர் கர்ப்பமாக இருந்தது, ஒரு குற்றச்செயல் நடக்கும் வரை யாருக்கும் தெரியாமல் இருந்தது ஏன், அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் மீது சரியான கவனம் செலுத்தப்படுவதில்லையா என பல கோணங்களிலும் அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளார்கள்.



