பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ருபல் ஹொஸைன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பங்களாதேஷ் அணிக்காக இதுவரை 159 போட்டிகளில் ஆடி இருக்கும் 36 வயதான ருபல், பேஸ்புக்கியில் தனது 3.5 மில்லியன் பின்தொடர்வோருக்கு தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ருபல் கடைசியாக 2021 ஏப்ரலில் நியூசிலாந்துக்கு எதிராக ஒக்லாந்தில் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியிலேயே பங்களாதேஷ் அணி சார்பில் ஆடி இருந்தார். தொடர்ந்து காயங்களால் அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதும் அரிதாக அமைந்தது.

‘தேசிய அணியில் ஆடுவதில் ஆர்வமுடன் இருந்தபோதும் ஒரு கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுக்க வேண்டி ஏற்படுகிறது. அந்த மனநிலையுடன், சர்வதேச கிரிக்கெட்டுக்கு நான் விடை கொடுக்கிறேன். எவ்வாறாயினும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ஆட எதிர்பார்த்துள்ளேன்’ என்று அவர் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2009 இல் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக சம்பிக்க ராமநாயக்க இருந்தபோது அவரது வேகப்பந்து வீச்சாளரை தேடும் முயற்சியின்போதே ரூபல் ஹொஸைன் அணியில் இடம்பெற வாய்ப்புப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




