ஈரான் போரால் உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்து, விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
2028 முதல் பிரித்தானியாவில் கட்டப்படும் அனைத்து புதிய வீடுகளிலும் சோலார் பேனல்கள் மற்றும் ஹீட் பம்ப்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் Future Homes Standard எனப்படும் புதிய கட்டிட விதிமுறைகளின் கீழ் அமுல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம், புதிய வீடுகள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். மேலும், குறைந்த கார்பன் உமிழும் ஹீட் பம்ப்கள் மற்றும் district heat networks போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வெப்பமூட்டும் முறைகளும் கட்டாயமாக்கப்படுகின்றன.

பிரித்தானியாவின் எரிசக்தி செயலாளர் எட் மிலிபாண்ட், “ஈரான் போரால் எரிபொருள் சந்தைகள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றன என்பதை உலகம் கண்டுள்ளது. அதனால், சுத்தமான மின்சார உற்பத்தி நம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு அவசியம்.
புதிய வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவது, மக்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்ய உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை எரிசக்தி துறை வரவேற்றாலும், சில சமூக ஆர்வலர்கள், “இது போதாது; எரிபொருள் மீதான சார்பை குறைக்க இன்னும் பல நடவடிக்கைகள் தேவை” என்று வலியுறுத்துகின்றனர்.
ஈரான் போரால் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத எரிபொருள் இந்த கடல்பாதையைச் சார்ந்துள்ளது.
இதனால், Brent crude 100 டொலரை கடந்துள்ளது. Dubai crude 150 டொலர் வரை உயர்ந்துள்ளது. சில நாடுகள் எரிபொருள் ரேஷன் முறையையும், விலை கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன.
பிரித்தானிய அரசு, இந்த புதிய விதிமுறைகள் மூலம், எதிர்காலத்தில் எரிபொருள் சந்தைகளின் தாக்கத்திலிருந்து தப்பித்து, சுயாதீன எரிசக்தி பாதுகாப்பை பெறும் நோக்கத்துடன் செயல்படுகிறது.




