இலங்கை கிரிக்கெட் வாரியம் தங்களது வீரர்கள் franchise லீக் போட்டிகளில் விளையாட NOC பெறுவதற்கு, உடற்தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
ஐபிஎல் அணிகளுக்கு கவலை
ஐபிஎல் 2026 தொடர் இம்மாதம் 28ஆம் திகதி தொடங்க உள்ள நிலையில் பேட் கம்மின்ஸ், சாம் கர்ரன், ஹேசல்வுட், நாதன் எல்லிஸ், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட வீரர்கள் காயமடைந்ததால் விலகியுள்ளனர். இது ஐபிஎல் அணிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் இலங்கை கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள நிபந்தனை, ஐபிஎல் தொடருக்கு உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, franchise லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடுவதற்கு தேவையான ‘தடையின்மை சான்றிதழ்களை’ (NOCs) பெறுவதற்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (SLC) தனது வீரர்கள் உடற்தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
அப்படியானால், ஐபிஎல் 2026 தொடரில் விளையாடவும் இலங்கை வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

சில வாரங்களில் இணையும் இலங்கை வீரர்கள்
இலங்கையின் வனிந்து ஹசரங்க லக்னோ அணியிலும், நுவான் துஷாரா பெங்களூரு அணியிலும், மதீஷா பத்திரனா கொல்கத்தா அணியிலும், ஈஷான் மலிங்கா ஐதராபாத் அணியிலும் அடுத்த சில வாரங்களில் இணைய உள்ளனர்.
இதற்கிடையில் துஷ்மந்த சமீரா, பதும் நிசங்கா (டெல்லி கேபிட்டல்ஸ்) மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் ஏற்கனவே “உடல் செயல்திறன் தேர்வில்” தேர்ச்சி பெற்றுவிட்டனர். எனவே அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.
அதே சமயம் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், நுவான் துஷாரா ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான NOCஐ பெறுவதற்கு, தனது உடல் செயல்திறன் தேர்வின் முடிவைப் பொறுத்தே தகுதி பெறுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






