ஒரு உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட ஏழு அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிப்பதாக நேற்று அறிவித்த சீனா, அமெரிக்காவுக்கு ட்ரோன்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதாகவும் அறிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் வொஷிங்டனில் அடுத்த மாதம் உச்சி மாநாடு நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தடை மற்றும் கட்டுப்பாட்டு அறிவிப்புக்களை சீன வர்த்தக அமைச்சு விடுத்துள்ளது.
சீன நிறுவனங்களைக் குறிவைத்து வொஷிங்டன் சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு கணினி மென்பொருளைக் கொண்ட, இறக்குமதி செய்யப்படும் அலுவலக உபகரணங்கள் குறித்து தேசியப் பாதுகாப்பு விசாரணையை ஆரம்பித்த சீனா, அமெரிக்காவுடனான சில தொழிற்சாலை கண்காணிப்பு ஆய்வு ஒத்துழைப்பையும் இடைநிறுத்தியுள்ளது. அமெரிக்கா சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக இரத்து செய்யவும், அதன் தவறான செயல்களை நிறுத்தவும், ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான சீனா- − அமெரிக்க உறவைப் பேணுவதற்கும் இணைந்து செயல்படவும் வலியுறுத்துவதாக சீன பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சி.என்.என்




