தென்னமெரிக்க நாடான வெனிசுவெலாவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் நேற்று முன்தினம் இரண்டு பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்நிலநடுக்கங்களைத் தொடர்ந்து பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு உடனடியாக அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் உயிரிழந்துள்ளதோடு 971 பேர் காயமடைந்துள்ளனர் என்று பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் நேற்றுத் தெரிவித்தார். ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் வெனிசுவெலா முகம் கொடுத்துள்ள மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களாக இந்நிலநடுக்கங்கள் நோக்கப்படுகிறது. இதன் அதிர்வுகள் அப்பகுதியெங்கும் உணரப்பட்டுள்ளன.
நாட்டின் முக்கிய விமான நிலையம் சேதமடைந்து மூடப்பட்டுள்ளது. வெனிசுவெலாவின் தலைநகரான கராகஸிலிருந்து சுமார் 1,700 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பிரேசிலின் அமேசான் போன்ற தொலைதூர இடங்களிலும் கட்டடங்கள் காலி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெனிசுவெலா மக்கள் இருப்பிட கட்டடங்களில் இருந்து வெளியேறி வீதிகளிலும் திறந்த வெளிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சரிந்தும் இடிந்தும் விழுந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளின் தலைவர்களும் வெனிசுவெலாவுக்கு தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதோடு அவசர உதவிக்குழுக்களையும் அனுப்பவும் தொடங்கியுள்ளனர்.




