ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பெட்டே ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சில நேட்டோ அமைப்பு நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்தும் அமெரிக்கா ஈரானுடன் முன்னெடுத்த போர் தொடர்பிலான அவர்களது நிலைப்பாடுகள் குறித்தும் அவர் கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ கூட்டணியின் தலைமையகத்தில் நடைபெற்ற நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அமெரிக்க படைகளை வைத்திருப்பது தொடர்பான இந்த மீளாய்வில் சில நாடுகள் தோல்வியடையும், ஏனைய நாடுகள் சிறப்பாகத் தேர்ச்சி பெறும். ஈரானுடனான போர் காலத்தில் பல நேட்டோ நட்பு நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கத் தவறின. இது வெட்கக்கேடான அணுகல். தங்கள் தளங்களை எங்களது பயன்பாட்டுக்கு வழங்க மறுத்ததோடு விமானங்கள் பறக்கவும் இடமளிக்கவில்லை. இந்த நட்பு நாடுகள், தளங்கள் மற்றும் வான்வழியைப் பயன்படுத்த மறுத்ததன் மூலம், அமெரிக்க பிரஜைகளை ஆபத்தில் ஆழ்த்தினர் என்றும் குறிப்பிட்டார். ஏ.பி.சி நியூஸ்




