அமெரிக்க அரசாங்கம் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கிய TH-57 (Sea Ranger) ரக 10 ஹெலிகொப்டர்கள் கடல் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்துள்ளன. இந்த ஹெலிகொப்டர்களின் வருகை, இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், இலங்கை விமானப்படையின் செயல்பாட்டு மற்றும் பயிற்சி திறன்களை மேம்படுத்துவதற்கான பெறுமதியான பங்களிப்பாகவும் அமைவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
தற்போது இந்த ஹெலிகொப்டர்கள் இரத்மலானை விமானப்படைத் தளத்தில் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள விமானப்படை, தேவையான ஆய்வுகள், மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்த பின்னர், அவை உத்தியோகபூர்வமாக விமானப்படை சேவையில் இணைக்கப்பட்டு செயல்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
TH-57 ஹெலிகொப்டர் படை, விமானப்படையின் விமானப் பயிற்சி திறனை குறிப்பிடத்தக்க அளவில் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேசிய தேவைகளுக்கான பல்வேறு பணிகளில் ஈடுபடுவதற்கான திறனையும் அதிகரிக்கும்.
இந்த ஹெலிகொப்டர்கள் முக்கியமாக விமானிகள் பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் , தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இலங்கை விமானப்படை மேற்கொள்ளும் பிற பொதுச் சேவை பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.



