மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள 2எஸ் சர்வதேச திறந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை செல்வி ருக்குனுதீன் நைலா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை தேசிய சோடோகான் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 14 வயதுக்குட்பட்ட 52 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிடவுள்ளார். இந்த வீராங்கனையை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (17) மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள வி.எம்.சி.டீ. கலைமன்றத்தில் நடைபெற்றது.
இதில் மன்னார் நகரசபை தலைவர் டானியல் வசந்தன், நகரசபை உறுப்பினர் எம்.இசட்.எம். இம்சாத், பயிற்றுவிப்பாளர் சென்சி ம. இன்பராஜ் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற சோடோகான் தேசிய கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற அ. அபிஷாலினி, இ. அஷ்வித், அ. அகீட் மற்றும் செ. கம்சினி ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



