இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (Tô Lâm), அரச விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு (07) இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வியட்நாம் ஜனாதிபதியையும் அவருடன் வருகை தந்த இராஜதந்திர தூதுக்குழுவினரையும், பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் மிகவும் கௌரவத்துடன் வரவேற்றார்.
இந்த வரவேற்பு நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி டோ லாம் உடன் வியட்நாம் அரசாங்கத்தின் பல சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் வருகை தந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த உயர்மட்ட விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



