லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக 54 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்ற பஞ்சாப் கிங்ஸ் தோல்வியுறாத அணியாக ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துவதோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இம்முறை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
நியூ சந்திகாரில் நேற்று முன்தினம் (19) நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி 3 ஓட்டத்திற்கு முதல் விக்கெட்டை இழந்தபோதும் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த பிரியான்ஷ் ஆர்யா (93) மற்றும் கூபர் கொனொலி (87) ஆகியோர் 182 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதன்மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை விளாசியது. பதிலெடுத்தாடிய லக்னோ அணியால் 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணி இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் 5 வெற்றி, ஒரு முடிவற்ற ஆட்டத்துடன் 11 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதேவேளை புள்ளிப் பட்டியில் கடைசி இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி ஆறு போட்டிகளின் பின் நேற்று முன்தினம் நடத்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் வெற்றியை பெற்றது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்ற நிலையில் கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.



