இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), ஏசியா பிராட்காஸ்டிங் கோர்ப்பரேஷன் (Asia Broadcasting Corporation) நிறுவனத்திற்குச் சொந்தமான ஹிரு தொலைக்காட்சிக்கு எதிராக ஊடக அமைச்சில் விரிவான உத்தியோகபூர்வ முறைப்பாடொன்றை இன்று (20) தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்ட செய்தியில், இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெயை 286 அமெரிக்க டொலர் என்ற மிக அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாகக் கூறப்பட்டது.

இவ்வாறான அதிக விலைக்கு தாம் ஒருபோதும் மசகு எண்ணெயை வாங்கவில்லை எனத் தெரிவித்துள்ள கூட்டுத்தாபனம், அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் சிதைக்கப்பட்டது எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சர்வதேசச் செய்திகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, பொதுமக்களிடையே ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கும் நோக்கில் இந்தச் செய்தி ஒளிபரப்பப்பட்டதாக CPC குற்றம் சுமத்தியுள்ளது.
இது குறித்து உத்தியோகபூர்வ விளக்கம் அளிக்கப்பட்ட பின்னரும், ஹிரு தொலைக்காட்சி வேறொரு தலைப்பின் கீழ் (HSBC அறிக்கையை மேற்கோள் காட்டி) அதே தவறான கருத்தை மீண்டும் ஒளிபரப்பியதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பொய்ச் செய்திகள் பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதுடன், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும்.
உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கூட்டுத்தாபனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதுடன், வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடனான உறவுகளும் பாதிக்கப்படக்கூடும்.
கருத்துச் சுதந்திரம் என்பது பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கான உரிமம் அல்ல எனவும், இது ஊடகத் தர்மத்தை மீறிய செயல் எனவும் CPC தெரிவித்துள்ளது.
ஹிரு தொலைக்காட்சி மற்றும் அதன் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு எதிராக அவசர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தவறான செய்தியைத் திருத்தி, அதற்கு இணையான முக்கியத்துவத்துடன் பொது மன்னிப்பு/மறுப்புச் செய்தியை அவர்கள் வெளியிட வேண்டும்.
தேசியப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயற்படுவதை உறுதிப்படுத்த புதிய ஒழுங்குமுறை விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.



