மதுரோ கைதில் பிரித்தானியாவிற்கு எந்த தொடர்பும் இல்லை என ஸ்டார்மர் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான இராணுவ நடவடிக்கையில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “இந்த நடவடிக்கையில் பிரித்தானியா எவ்விதத்திலும் ஈடுபடவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடன் இதுவரை பேசவில்லை என்றும், “இது வேகமாக மாறும் சூழ்நிலை. முதலில் உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டும்” என ஸ்டார்மர் கூறியுள்ளார்.
வெனிசுலாவில் உள்ள சுமார் 500 பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூதரகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, மதுரோவை போதைப்பொருள் மற்றும் ஆயுத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்ததாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், லிபரல் டெமோக்ராட் தலைவர் எட் டேவி, “மதுரோ கொடூரமான, சட்டவிரோத ஆட்சியாளர் தான். ஆனால் அமெரிக்காவின் சட்டவிரோத தாக்குதல் உலகை மேலும் அபாயகரமாக்குகிறது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், Reform UK தலைவர் நைஜல் பாராஜ், இந்த “அசாதாரண” நடவடிக்கை ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் தாக்குதல்களைத் தடுக்க உதவும் எனக் கூறியுள்ளார்.
Green கட்சி தலைவர் ஜாக் போலன்ஸ்கி, அமெரிக்க தாக்குதல் “சட்டவிரோதமானது” என்றும், “மனித உரிமை மீறல்” என்றும் விமர்சித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் தூதர் காஜா கல்லாஸ், “மதுரோவுக்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை” என்றாலும், அமைதியான மாற்றமே சரியான வழி என வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் சர்வதேச சட்டம், மனித உரிமைகள், மற்றும் உலக அரசியல் நிலைப்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.




