சுப்பர்சொனிக் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு கட்டமைப்புக்களை வாங்குவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் போரைத் தொடர்ந்து, ஆயுதக் கொள்முதலைத் தீவிரப்படுத்தியுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சுப்பர்சொனிக் குரூஸ் ஏவுகணையான பிரம்மோஸ் உட்பட சில முதன்மை பாதுகாப்பு கட்டமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருப்பதை நான்கு இந்திய வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ்தீரை விற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளன. ‘பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ்தீர் உட்பட எங்களின் பல ஆயுத கட்டமைப்புகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆர்வம் காட்டியுள்ளது. இது தொடர்பில் இருதரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன, அவை வேகமாக முன்னேறி வருகின்றன’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தை நிறைவுற்று ஒப்பந்தம் எட்டப்படுகையில், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பிறகு பிரம்மோஸ் ஏவுகணையைப் பெறும் நான்காவது நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விளங்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரொய்ட்டர்ஸ், டைம்ஸ் ஒப் இந்தியா




