இலங்கை தடகள விளையாட்டு வரலாற்றில் கடுமையான போட்டித்தன்மை வாய்ந்த சர்வதேச டயமண்ட் லீக் தடகளப் போட்டித் தொடரில், இலங்கை வீரர் ருமேஷ் தரங்க வரலாற்றுச் சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
இப்போட்டித் தொடரில் பங்கேற்ற ருமேஷ் தரங்க, ஈட்டியை 85.97 மீற்றர் தூரத்திற்கு எறிந்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த அசாத்திய திறமையின் மூலம் அவர் இப்போட்டித் தொடரில் 2ஆம் இடத்தை தமதாக்கிக் கொண்டார்.
டயமண்ட் லீக் போட்டித் தொடர் ஒன்றில் இவ்வாறானதொரு வெற்றியைப் பெற்று, வரலாற்றில் தடம் பதித்த முதல் மற்றும் ஒரேயொரு இலங்கை வீரர் என்ற பெருமையை ருமேஷ் தரங்க பெற்றுள்ளார். இது இலங்கை நாட்டிற்குப் பெரும் பெருமிதத்தைத் தேடித்தந்துள்ளது.
உலகின் மிகச்சிறந்த தடகள வீரர்களுடன் நேருக்கு நேர் மோதி, முதலிடத்திற்கு மிக நெருக்கமாக வந்து அவர் காட்டிய இந்தத் திறமையானது, இலங்கை தடகள வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திப் பிடித்துள்ளது.
அடுத்த டயமண்ட் லீக் போட்டித் தொடரில் முதலிடத்தைப் பெற்று, இலங்கைத் தாயகத்தின் நாமத்தை சர்வதேச அரங்கில் மேலும் உயர்த்த வேண்டும் என்ற ருமேஷ் தரங்கவின் அசைக்க முடியாத தன்னம்பிக்கையையும், அர்ப்பணிப்பையும் விளையாட்டுத்துறை அமைச்சு வெகுவாகப் பாராட்டியுள்ளது.



