இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 4 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

1 Min Read

வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெயரளவில் “போர்நிறுத்தம்” நடைமுறையில் இருந்தபோதிலும் இஸ்ரேல் தனது தினசரித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

புதன்கிழமை காசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காசா நகரில் இருந்து அல் ஜசீரா செய்தியாளர் ஹிந்த் கௌடாரி கூறுகையில், மேலும் இஸ்ரேலிய தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தால் பாலஸ்தீனர்கள் பதற்றத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். தாக்குதல் நடந்தபோது அருகில் உள்ள பூங்காவில் பல குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக அவர் கூறினார். இஸ்ரேலிய தாக்குதல்களில் தங்கள் குழந்தைகள் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில், பெற்றோர்கள் தங்கள் வீடுகளையோ அல்லது கூடாரங்களையோ விட்டு வெளியேற தயங்குவதாக கௌடாரி கூறினார்.

செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸின் ஆயுதப் பிரிவின் தலைவர் முகமது ஒடேவின் இறுதிச் சடங்கில் அதிகளவான பாலஸ்தீனியர்கள் கலந்துகொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குழுவின் எஞ்சியிருக்கும் மூத்த தலைவர்களை ஒழிப்பதற்கான தனது பிரசாரத்தை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. காசா நகரில் நடந்த இந்தத் தாக்குதலில் ஒடேவின் மனைவி மற்றும் மகனும் கொல்லப்பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *