பதினைந்து வயது வைபவ் சூர்யவன்சியின் அதிரடி ஆட்டத்தால் பிளே ஓஃப் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசஸ் ஹைத்ராபத்தை வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 2ஆவது குவாலிபயர் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
ராஜஸ்தான் றோயல்ஸ் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேற இன்று (29) நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ராஜஸ்தான் இடம் தோற்ற ஹைத்ராபாத் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
நியூ சந்திகாரில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ராஜஸ்தான் அணிக்கு சூர்யவன்சி மீண்டும் ஒருமுறை அதிரடி காட்டினார். 29 பந்துகளில் 97 ஓட்டங்களை விளாசிய அவர் ஆஸி. அணித் தலைவர் பெட் கமின்ஸுக்கு தொடர்ந்து மூன்று சிக்ஸர்களுடன் மொத்தம் 12 சிக்ஸர்களை விளாசினார்.
ஐபிஎல் இல் வேகமாக சதம் பெற்றவர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை நெருங்கிய அவர் அப்பர் கட் முறையில் துடுப்பெடுத்தாடியபோது பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்த அதிவேக ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்த 243 ஓட்டங்களை பெற்றது. இதன்போது த்ரூவ் ஜுரல் 21 பந்துகளில் 50 ஓட்டங்கைளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த சன்ரைசஸ் அணி ஓட்டம் பெறும் முன்னரே அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த வீரர்களும் பிடிகொடுத்து ஆடவில்லை. இதனால் சன்ரைசஸ் 19.2 ஓவர்களில் 196 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஏற்கனவே நடப்புச் சம்பியன் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.



