அரசாங்கத்தின் நிதி ஒழுக்கமும் IMF பாராட்டும்!

5 Min Read

இலங்கையின் பொருளாதார விவாதம் இன்று இரண்டு தீவிரமான முகாம்களுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. ஒரு தரப்பு, “நாடு மீண்டு வருகிறது” என்று கூறுகிறது. மற்றொரு தரப்பு, “மக்களின் வாழ்க்கையில் இன்னமும் முன்னேற்றம் இல்லை” என்று வாதிடுகிறது. உண்மை, இந்த இரண்டிற்கும் நடுவில் இருக்கிறது.

பொருளாதாரக் கணக்குகளில் முன்னேற்றம் இருக்கிறது; அதே நேரத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் அதன் முழுப் பலன் இன்னும் பிரதிபலிக்கவில்லை. எனவே, அரசியல் விருப்பு, வெறுப்பைத் தாண்டி, நல்லதை நல்லதாகச் சொல்லும் நேரம் இது.

2026 ஏப்ரல் 9 அன்று IMF, இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாம் மற்றும் ஆறாம் மதிப்பாய்வுகளுக்கான அதிகாரிகள் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தது.

அந்த அறிக்கையில், இலங்கை அதிகாரிகள் முன்னெடுத்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மீட்சியை ஆதரித்துள்ளன என்றும், வெளிநாட்டு கையிருப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் வருவாய் திரட்டல் எதிர்பார்ப்புகளை விடச் சிறப்பாக இருந்தன என்றும் குறிப்பிடப்பட்டது. இதன் மூலம், IMF நிர்வாக சபை அங்கீகாரம் வழங்கினால் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இது ஒரு சாதாரண பாராட்டு அல்ல. 2022ஆம் ஆண்டு வெளிநாட்டு நாணய நெருக்கடி, எரிபொருள் வரிசைகள், மின்வெட்டு, இறக்குமதிக் கட்டுப்பாடுகள், கடன் தவணை நிறுத்தம் ஆகியவற்றை சந்தித்த நாடு, மீண்டும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெறுவது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிக முக்கியமான மாற்றமாகும். உலகில் அரிதாக நடக்கும் நிகழ்வு.

IMF அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு இலங்கைப் பொருளாதாரம் 5% வளர்ச்சி கண்டது; 2026 மார்ச் இறுதியில் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது.

இதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு உரிய பாராட்டை வழங்க வேண்டும். அரசியல் வேறுபாடு இருந்தாலும், நிதி ஒழுக்கம், வருவாய் திரட்டல், மத்திய வங்கியின் சுதந்திரம், கடன் மறுசீரமைப்பு, அரச செலவுக் கட்டுப்பாடு போன்ற கடினமான துறைகளில் தொடர்ச்சியான கொள்கை நடைமுறைப்படுத்தல் இல்லாமல் இத்தகைய சர்வதேச நம்பிக்கை உருவாக முடியாது.

IMF குழு, ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க உட்பட அரசின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

ஆனால் IMF பாராட்டு என்பது தேர்தல் மேடைப் பாராட்டு அல்ல. அது ஒரு நிபந்தனை கொண்ட தொழில்நுட்ப மதிப்பீடு. IMF அதே அறிக்கையில், செலவு மீட்பு அடிப்படையிலான மின்சார மற்றும் எரிபொருள் விலை நிர்ணயத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதேநேரத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறுகிறது. அதாவது, அரசின் பொருளாதாரக் கொள்கை சரியான திசையில் இருக்கலாம்; ஆனால் அதன் சமூக விளைவு சரியாக கையாளப்படாவிட்டால் அதே கொள்கை அரசியல் எதிர்ப்பையும் மக்கள் அதிருப்தியையும் உருவாக்கும். இதைத்தான் ஐஎம்எஃப் கூறுகிறது.

இன்றைய இலங்கையின் உண்மையான நிலை இதுதான்: macroeconomic indicators (பேரியல் பொருளாதாரக் குறிகாட்டிகள்) முன்னேறுகின்றன;

நுண் பொருளாதார வலி இன்னும் குறையவில்லை. மத்திய வங்கியின் 2026 ஏப்ரல் அறிக்கையின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான ஆண்டு பணவீக்கம் 2026 மார்ச் மாதத்தில் 2.2% இருந்து ஏப்ரலில் 5.4% ஆக உயர்ந்தது. உணவுப் பணவீக்கம் 2.8% ஆகவும், உணவல்லாதப் பணவீக்கம் 6.8% ஆகவும் உயர்ந்தது. இதற்கு மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வு முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இது எதிர்பாரத ஒரு ஏற்பாடு.

இதுவே பொதுமக்களின் கேள்விக்கு பதில் தருகிறது. “பொருளாதாரம் வளர்ந்தால், ஏன் வாழ்க்கைச் செலவு குறையவில்லை?” என்பது ஒரு நியாயமான கேள்வி.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைச் செயல்பாடுகளின் மொத்த அளவை காட்டும். ஆனால் ஒரு குடும்பத்தின் சமையல் எரிவாயு, போக்குவரத்துச் செலவு, மின்சார கட்டணம், பாடசாலைச் செலவு, மருந்துச் செலவு ஆகியவை வேறு தராசில் அளவிடப்படுகின்றன. அதனால், தேசிய மீட்பு மற்றும் குடும்ப நிவாரணம் ஒன்றல்ல.

மற்றொரு முக்கிய சவால் வெளிநாட்டு துறையில் உள்ளது. மத்திய வங்கியின் 2026 மார்ச் அறிக்கையின்படி, 2026 முதல் காலாண்டில் நடப்பு கணக்கில் 531 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகமாக இருந்தது. இது நல்ல செய்தி. ஆனால் அதே காலத்தில் பொருட்களுக்கான வர்த்தக பற்றாக்குறை 2025 முதல் காலாண்டின் 1.5 பில்லியன் டொலரிலிருந்து 2026 முதல் காலாண்டில் 2.3 பில்லியன் டொலராக விரிந்தது. எரிபொருள் இறக்குமதி செலவு மார்ச் 2026இல் வருடாந்த அடிப்படையில் 74.7% உயர்ந்தது; வாகன இறக்குமதிகளும் முதல் காலாண்டில் 613 மில்லியன் டொலரை எட்டின.

இதன் பொருள் தெளிவானது. மீட்பு ஆரம்பித்தவுடன் இறக்குமதி தேவையும் அதிகரிக்கிறது. வாகனங்கள், எரிபொருள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் ஆகியவை வெளிநாட்டு நாணயத் தேவை உருவாக்குகின்றன. அதே வேளையில், சுற்றுலா வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானம் போதுமான வேகத்தில் வளரவில்லை என்றால், ரூபாய்க்கு மீண்டும் அழுத்தம் உருவாகும். மத்திய வங்கி, 2026 ஏப்ரல் இறுதிவரை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக வருடத் தொடக்கம் முதல் 2.9% மதிப்பிழந்ததாகவும் பதிவு செய்துள்ளது.

இதனால் அரசாங்கத்தின் அடுத்த கட்ட சோதனை, IMF திட்டத்தைத் தொடர்வது மட்டுமல்ல. வளர்ச்சியை மக்களின் வாழ்க்கைக்குள் கொண்டு வருவதும் ஆகும். வரி வருவாயை உயர்வது நல்லது; ஆனால் அது உற்பத்தி முதலீடு, வேலைவாய்ப்பு, சிறு தொழில் நிவாரணம், கல்வி–சுகாதார தரம், ஊழல் தடுப்பு, ஏற்றுமதி விரிவாக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு ஆகியவற்றாக மாற வேண்டும். இல்லையெனில், நிதிப் பலப்படுத்துதல் என்பது கணக்கில் வெற்றி பெற்றாலும் சமூகத்தில் தோல்வியடையும்.

ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையில் பாராட்டத்தக்க அம்சங்கள் உள்ளன. நிதி ஒழுக்கம், IMF உடன் தொடர்ச்சியான ஈடுபாடு, கடன் மறுசீரமைப்பை முன்னேற்றல், வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்பல், மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மையை மதித்தல் ஆகியவை பாராட்டத்தக்கவை. நல்லதைப் பாராட்டாமல் இருப்பது அரசியல் நேர்மையல்ல.

மக்கள் இன்னும் உயர் வரி, உயர் மின்சார–எரிபொருள் செலவு, பலவீனமான வருமான உயர்வு, தொழில் நிச்சயமின்மை, இறக்குமதி சார்ந்த விலையேற்றம் ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள்.

இலங்கைக்கு இப்போது தேவை மக்களையும் உற்பத்தியையும் காப்பாற்றும் பொருளாதாரம். ஒழுக்கமான நிதிக் கொள்கை தொடர வேண்டும். அதே நேரத்தில், சமூக பாதுகாப்பு துல்லியமாகவும், போதுமானதாகவும் இருக்க வேண்டும். வரி அடிப்படை விரிவடைய வேண்டும்; ஆனால் நேர்மையான வரி செலுத்துநர்களுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் சுமையேற்றக் கூடாது.

இப்போதைக்கு அமெரிக்க – ஈரான் சச்சரவில் இலங்கை யின் பொருளாதாரத்தில் நம்பிக்கை எனும் ஒளிக்கீற்று பிரகாசிக்கின்றது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமானது ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஆகும். இந்த நீரிணை தங்குதடையின்றி திறந்திருப்பதால் வறிய நாடுகளுக்கு எரிபொருள் விலை நிலைப்புத்தன்மை, பணவீக்கக் குறைப்பு, மற்றும் தடையற்ற உணவு/உர விநியோகம் போன்ற நேரடிப் பொருளாதார நன்மைகள் கிடைக்கப் போகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *