தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி அதிவேக ஈனுலை (Prototype Fast Breeder Reactor – PFBR) ‘கிரிட்டிகாலிட்டி’ நிலையை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியா தனது சொந்த அணுசக்தியை உற்பத்தி செய்யும் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த மைல்கல் சாதனை, அணுசக்தி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் ஆற்றலை உலகிற்கு உணர்த்துகிறது. இந்த “ஃபாஸ்ட் பிரீடர்” (Fast Breeder) தொழில்நுட்பமானது, தான் நுகரும் எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
தற்போது உலகிலேயே ரஷ்யா மட்டுமே வணிக ரீதியிலான அதிவேக ஈனுலைகளை இயக்கி வரும் நிலையில், இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள அடுத்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
கல்பாக்கத்தில் இந்த அணு உலை செயல்படத் தொடங்குவது, இந்தியாவின் அணுசக்தி மூலோபாயத்தின் தந்தையான டொக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபாவால் வடிவமைக்கப்பட்ட மூன்று கட்ட அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான மாற்றத்தைக் குறிக்கிறது.
இந்த சாதனை 2070 இற்குள் பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்குப் பக்கபலமாக இருக்கும். மேலும், புதைபடிவ எரிபொருட்களைச் (fossil fuels) சார்ந்திருப்பதைக் குறைக்கும்.
இந்தியாவிடம் குறைந்த அளவே யுரேனியம் இருப்பு உள்ள போதிலும், உலகின் மிகப்பெரிய தோரியம் இருப்புப் பகுதிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்த இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ‘யுரேனியம்-233’ எரிபொருளைக் கொண்டு, நாட்டின் பரந்த தோரியம் இருப்புகளைப் பயன்படுத்தி அடுத்த 400 ஆண்டுகளுக்குத் தேவையான ஆற்றலைத் தடையின்றிப் பெற முடியும். எதிர்கால இலக்கு: தற்போது இந்தியாவின் அணுசக்தி திறன் 8.78 கிகாவாட் ஆக உள்ளது, இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 3% ஆகும். இது 2031-32க்குள் 22.38 கிகாவாட்டாக உயர்த்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், புதடெல்லியின் அணுசக்தி திட்டத்தின் கீழ், 2047ஆம் ஆண்டிற்குள் 100 கிகாவாட் அணுசக்தி உற்பத்தித் திறனை அடைவதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் மற்றும் சர்வதேச எரிபொருள் விநியோகத் தடைகளால் உலகளவில் ஆற்றல் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் வேளையில், இந்தியாவின் இந்த உள்நாட்டு அணுசக்தித் தொழில்நுட்ப முன்னேற்றம் அதன் பொருளாதார வளர்ச்சியைப் பாதுகாப்பதோடு, ஆற்றல் துறையில் தன்னிறைவை நோக்கிச் செல்லும் ஒரு முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.



