இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய யாப்பு ஒன்றை அமைத்து நிர்வாக முறையை மாற்றவிருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் நிறைவேற்றுக் குழு பதவி விலகியதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பது பேர் கொண்ட இடைக்கால குழு நியமிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் மாற்றங்களை செய்வது குறித்து இந்தப் குழு ஏற்கனவே உறுதி அளித்த நிலையிலேயே விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் நேற்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
‘எமக்கு இருக்கும் அடிப்படையான பொறுப்பு நாம் புதிய யாப்பு ஒன்றை அமைக்கவிருக்கிறோம். நிர்வாக முறையை மாற்றவிருக்கிறோம். இது இன்று நேற்றைய கதையல்ல. பல ஆண்டுகளாக இது பேசப்பட்டு வந்தது. எல்லா இடங்களிலும் இது பேசப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திலும் இது பேசப்பட்டது. மாற்றம் நிகழ வேண்டும் என அனைவருமே கூறியுள்ளார்கள்.
அந்த மாற்றத்தைச் செய்வதே எமக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை பொறுப்பாகும். அதனை செய்வதற்கு நாம் முதலில் யாப்பை மாற்றப்போகிறோம். அதனைச் செய்வதற்கு நாம் மக்கள் கருத்தை பெற ஆரம்பித்திருக்கிறோம். கிரிக்கெட் தொடர்பான தரப்பினரிடமும் நாம் கருத்துகளை பெறவுள்ளோம்’ என்றார்.



