கொழும்பு அணிக்கு எதிரான தேசிய சுப்பர் லீக் நான்கு நாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடும் தம்புள்ளை அணி 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 183 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (05) முதல் இன்னிங்ஸில் 76 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையிலேயே தனஞ்சய டி சில்வா தலைமையிலான தம்புள்ளை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
எனினும் ஆரம்ப வரிசையில் வீரர்கள் நின்றுபிடித்து ஆடத் தவறினர். ஆரம்ப விக்கெட்டுக்கு நிஷான் மதுஷங்க (43) மற்றும் விஷாட் ரன்திக்க (21) 56 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட நிலையில் மேலும் 33 ஓட்டங்களைப் பெறுவதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்நிலையில் நேற்றைய நாள் ஆட்டநேர முடிவின்போது தம்புள்ளை அணி 34.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.



