அபிஷேக் ஷர்மாவின் அதிரடி சதம் மற்றும் எஷான் மாலிங்கவின் அபார பந்துவீச்சின் மூலம் டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசஸ் ஹைத்ராபாத் 47 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ஐபிஎல் புள்ளிப்பட்டியலிலும் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
ஹைத்ராபாத்தில் நேற்று முன்தினம் (21) நடந்த போட்டியில் இலங்கை இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க, மாலிங்கவுடன் ஹைத்ராபாத் அணி சார்பில் தனது முதல் ஐபிஎல் போட்டியில் ஆட அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஹைத்ராபாத் அணிக்கு ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் ஷர்மா அதிரடி காட்டினார். 20 ஓவர்களுக்கும் களத்தில் இருந்த அவர் 68 பந்துகளில் தலா 10 பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 135 ஓட்டங்களை விளாசினார். இது டி20 வரலாற்றில் நான்காவது அதிகூடிய ஓட்டங்களாக அமைந்தது. இதன்மூலம் ஹைத்ராபாத் 20 ஓவர்களுக்கும் 2 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து பதிலெடுத்தாட வந்த டெல்லி அணிக்கு இமாலய வெற்றி இலக்கை எட்டுவது கடினமானது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களையே பெற்றது. இதன்போது சிறப்பாக பந்துவீசிய மாலிங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஹார்ஷ் டுபே 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். மதுஷங்கவும் தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
மாலிங்க இம்முறை ஐபிஎல் தொடரில் இதுவரை 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதோடு அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியில் இரண்டாவது இடத்திற்கு முன்னெறி ஊதா நிறத் தொப்பியை நெருங்கியுள்ளார்.



