இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதானக் கொள்கையிலிருந்து விலகி, ஆயுத ஏற்றுமதி மீதான தனது கட்டுப்பாடுகளை ஜப்பான் தளர்த்தியுள்ளது. பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள ஒரு காலகட்டத்தில் இந்த அறிவிப்பை ஜப்பான் விடுத்துள்ளது.
இதன் ஊடாக 17 நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் வாய்ப்பை ஜப்பான் பெற்றுக் கொண்டுள்ளது.

போக்குவரத்து, எச்சரிக்கை, கண்காணிப்பு, கண்ணிவெடி அகற்றுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மட்டுமே ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தி வந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதன் ஊடாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட, பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள 17 நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுத விற்பனை மீதான தடை தொடரும் என்றுள்ள போதிலும் ஜப்பானுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு இது பொருந்தாது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சி, ‘அதிகரித்து வரும் கடுமையான பாதுகாப்புச் சூழலில், எந்தவொரு நாடும் தற்போதைய சூழலில் தனது அமைதியையும் பாதுகாப்பையும் தனியாகப் பாதுகாக்க முடியாது’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.



